நாமக்கல், ஏப்.18
அசைபோடும் கால்நடைகளில் அமில மிகை நோய் தாக்கத்தால், இறப்பு ஏற்பட்டு, விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. அவற்றை தடுக்க தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மேலும் அவர் கூறியாவது: அனைத்து வகை அசைபோடும் பிராணிகளும் (வெள்ளாடு, செம்மறி ஆடு, பசு மற்றும் எருமை இனங்கள்) எளிதில் செரிமானமாகக் கூடிய மாவு சத்து நிறைந்த உணவுப்பொருள்களான அரிசி, கோதுமை, அடுமனை உபரிப் பொருள்கள் மற்றும் தானியங்கள் ஆகியவற்றை அளவிற்கு அதிகமாக அளிக்கும்போது, அமில மிகை நோயால் பாதிக்கப்படுகின்றன. பிராணிகள் இறக்கவும் வாய்ப்புள்ளது. அமில மிகை நோய் என்பது, கால்நடைகளுக்கு சரியான விகிதத்தில் உணவு (தீவனம்) அளிக்காததால் ஏற்படக்கூடிய பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாகும்.
அரிசி, கோதுமை, சோளம், குச்சிக்கிழங்கு மற்றும் அவற்றின் மாவு வகைகளை அதிகமாக அளித்தால், லாக்டிக் அமில உற்பத்தி அதிகமாகி, திடீரென இறப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. நோய் அறிகுறிகள் என்பது, அசை போடாத நிலை, பசியின்மை, வயிறு உப்புசம், அமில வாடையுடைய புளித்த சாணம், கழிச்சல்.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மருத்துவமனையில், அமில மிகை நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு, சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கால்நடைகளில் மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது அது பற்றிய சந்தேகம் ஏற்பட்டாலோ, கால்நடை மருத்துவக் கல்லூரி, கால்நடை மருத்துவ சிகிச்சைத் துறையை அணுகலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment