Skip to main content

பருத்தி வயலில் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு


திருவாரூர், ஏப்.25
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேயுள்ள ராதாநல்லூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி வயிலில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் மு. ராமசுப்பிரமணியன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா. ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

தற்போது, பருத்தி வயலில் அசுவிணி மற்றும் இலைப்பேன் தாக்குதலின் அறிகுறிகள் தென்படுகிறது. அசுவிணியின் தாக்குதலால் இலை ஓரங்கள் கீழ்நோக்கி சுருண்டு கீழ்நோக்கிய கிண்ணம் போன்று காணப்படும். இலைப்பேன் தாக்குதலால் இலைகளின் அடிப்பாகத்தில் மிக நுண்ணிய வெண் புள்ளிகளும், சேதம் மிக அதிகமாக உள்ளபோது இலைகள் மொரமொரப்பாகவும், மேல் நோக்கி வளைந்தும் காணப்படும்.

ஒருங்கிணைந்த முறைகளில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: மக்காச் சோளத்தை பருத்தி வயலை சுற்றி பயிரிடும் போது சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு தடுப்புப் பயிராக இருக்கும். வயல் வரப்புகளில் தட்டைப் பயரை ஓரப்பயிராகப் பயிரிட்டு நன்மை செய்யும் பொறிவண்டு, கிரைசோபிட் உள்ளிட்ட பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. உதிர்ந்த சப்பைகள், பூக்கள் மற்றும் காய்கள் ஆகியவற்றை கையால் பொறுக்கி அழிப்பதன் மூலம் பூச்சிகளின் பெருக்கத்தைக் குறைக்க முடியும். மஞ்சள் நிறம் பூசப்பட்ட தகர டப்பாவின் மேல் ஆமணக்கு எண்ணெய் அல்லது கிரீஸ் தடவி ஏக்கருக்கு 10 இடங்களில் வைத்து வெள்ளை ஈ மற்றும் தத்துப் பூச்சியின் வளர்ந்த பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
தாவர பூச்சிக்கொல்லிகளான வேப்பெண்ணெய் 2 சதம் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மிலி அல்லது வேப்பங் கொட்டைக் கரைசல் 5 சதம் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மிலி என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை தாக்குதலின் தீவிரத்தைப் பொருத்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல். – 50 மில்லி, தயாமீத்தாக்ஸாம் 25 டபிள்யூ.யூ.ஜி. – 40 கிராம், அசிட்டாமாபிரைட் 20 எஸ்.பி.- 40 கிராம், குளோர்பைரீபாஸ் 20 ஈ.சி. – 500 மி.லி., பிப்ரோனில் 5 எஸ்.சி. – 800 மி.லி., புரபினோபாஸ் 50 ஈ.சி.-400மி.லி., டைமெத்தோயேட் 30 ஈ.சி. – 200 மி.லி. ஆகிய இரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளைகளில் தெளித்துக் கட்டுப்படுத்தி கூடுதல் மகசூல் பெறலாம் என தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

அக்ரி-டாக்டர் மின் நாளிதழ்

https://agridoctor.in/?p=15  

தென்னையில் குருத்தழுகல் நோய்

     தென்னையில் குருத்தழுகல் நோய்